10

படைத்துக் ,காத்து, அழித்து, மறைத்து, அருளும் நடராஜரின் திரு உருவில் உள்ள அர்த்தங்கள் தான் எத்தனை? இப்போது இந்தக் கட்டுரையை எழுதும்படி என்னைத் தூண்டியதும் அவர்தான், அதைப் படிக்கும்படியான உணர்வை உங்களுக்குத் தூண்டுவதும் அவர்தான். இப்படி எல்லாமாக நிறைந்திருக்கும் நடராஜரின் திரு உருவமே “ஓம்” என்னும் எழுத்தைப் போல் இருக்கிறது என்று ஏற்கெனவே சொன்னேன். உலக மக்களைத் துன்பத்தில் இருந்து விடுவித்து முக்தி கொடுக்கவும் தான் அவர் ஆடுகிறார். அவர் கையில் இருக்கும் “டமரூ”வின் சப்தத்தில் மக்களை அழைக்கிறார் எனக் கொள்ளலாம். இதைத் தவிர டமரூவின் சப்தத்தில் தான் சிருஷ்டியே நடக்கிறது. தன் கைகளால் பாதுகாப்பும் அளிக்கிறார் உலக மக்களுக்கு அபய ஹஸ்தத்தின் மூலம். இந்த அபய ஹஸ்தம் தான் ஸ்திதியையும் காட்டுகிறது. நெருப்பை ஏந்தி இருக்கும் கையானது அவர் நமக்கு அளிக்கும் சத்தியப் பிரமாணத்தைக் காட்டுகிறது. “என் காலடியில் நீ வந்தாய் உனக்கு என்னுடைய பாதுகாப்பு உண்டு” என்று காட்டுகிறார். அதைத் தான் தன்னுடைய நடனமாடும் இடது காலை இடக்கையால் சுட்டியும் காட்டுகிறார். முயலகனை அழுத்தும் வலக்கால் நாம் இவ்வாறு நம் மனத்தைக் கட்டுப் படுத்த வேண்டும் எனக் காட்டுகிறது. தூக்கி நிற்கும் இடக்காலோ சொல்லாத வி்ஷயங்களே இல்லை. அதைத் தான் “குஞ்சிதபாதம்” எனச் சொல்கிறார்கள். இந்தக் குஞ்சித பாதத்தைப் பணிந்தால் நமக்கு இவ்வுலக பந்தங்களில் இருந்து விடுபட்டுப் பேரானந்த நிலையை அடையலாம் என்று சொல்கிறார். இது மட்டுமா?
மருவும் துடியுடன் மன்னிய வீச்சு
மருவு மமைப்பு அனலுடைக் கையும்
கருவின் மிதித்த கமலப் பதமும்
உருவில் சிவாய நமஎன ஓதே. (திருமூலர் திருமந்திரம்)

“நமசிவாயா” என்னும் ஐந்தெழுத்துப் பஞ்சாட்சரம் தான் அவரின் உடலின் அங்கங்களும் கூட. அக்னியை ஏந்தும் கையானது “ந” என்னும் எழுத்தையும், கால்கள் “ம” என்னும் எழுத்தையும், கீழே தொங்கிக் கொண்டிருக்கும் கை “சி” என்னும் எழுத்தையும், டமரூ வைத்திருக்கும் கை “வ” என்னும் எழுத்தையும், அபய ஹஸ்தம் “யா” என்னும் எழுத்தையும் குறிக்கிறது.
மாயைதனை உதறி வல்வினையைச் சுட்டுமலம்
சாய அமுக்கி அருள் தான் எடுத்து — நேயத்தால்
ஆனந்த வாரிதியில் ஆன்மாவைத் தான் அழுத்தல்
தான் எந்தையார் பரதம் தான். (உண்மை விளக்கம்; திருவதிகை மனவாசகங்கடந்தார்)

அரன்துடி தோற்றம் அமைத்தல் திதிஆம்
அரன்அங்கி தன்னில் அறையின் சங் காரம்
அரன்ஊற் றணைப்பில் அமருந்திரோ தாயி
அரன்அடி என்றும் அனுக்கிரகம் என்னே. “” (திருமந்திரம், திருமூலர்)

டமரூவின் ஓங்கார நாதத்தில் இருந்து தான் மொழி பிறந்தது என்று சொல்கிறார்கள். சிருஷ்டி ஆரம்பித்தது இந்த ஓங்கார நாதத்தில் இருந்து தான். அபய ஹஸ்த முத்திரை காத்தல் தொழிலைச் செய்கிறது. நெருப்பு ஏந்தி இருக்கும் கை அழித்தலைக் குறிக்கிறது. முயலகனை அழுத்தும் வலக்கால் மாயையை அழுத்துவதையும் மறைத்தல் தொழிலையும், தூக்கிநிற்கும் இடக்கால் அருளுவதையும், அந்த இடக்காலைச் சுட்டும் கை என்னிடம் வந்து சேர் என்றும் தெரிவிக்கிறது. இதில் இருந்து இந்த ஐந்தொழில்களைச் செய்பவர்கள் ஆன பிரம்மா, விஷ்ணு, ருத்ரன், மஹேஸ்வரன், சதாசிவன் ஆகிய ஐந்து பேரும் நடராஜருக்குள் அடங்குபவர்கள் என்றும் இவ்வுலகு அவரில்லாமல் இல்லை எனவும் தெரிய வருகிறது. தத்துவங்களும், உரைகளும், பாக்களும் அவனருளன்றி இல்லை என்பதோடு அல்லாமல் அவன் கோவில்களில் மட்டும் அடியார்கள் காணவேண்டி ஆடவில்லை. இந்த ஆட்டத்தால் தான் அவன் இவ்வுலகை மட்டுமல்லாது ஈரேழு பதினாலு உலகங்களையும் ஆட்டுவிக்கிறான் என்று சொல்கிறது.

எல்லைகளைக் கடந்த இந்த நாட்டியம் ஆனது முடிவற்றது. இடைவிடாது ஆடப்படுவது. இந்த ஓங்கார ஸ்வரூபம் இல்லையென்றால் எதுவும் இல்லை. இதற்குக் காலமோ, நேரமோ, இடமோ குறிப்பிட்டுச் சொல்ல முடியாதபடிக்குக் கால, தேச, வர்த்தமானங்களைக் கடந்தது. இந்தப் பிரபஞ்சமே அவன் ஆடலரங்கம். அவன் ஆடலரசன். ஆடுவதும் அவனே! ஆட்டுவிப்பதும் அவனே!

“வேதங்களாட மிகு ஆகமமாடக்
கீதங்களாடக் கிளர் அண்டம் ஏழாடப்
பூதங்கள் ஆடப் புவனம் முழுதாட
நாதங்கொண்டாடினான் ஞானானந்தக் கூத்தே!” திருமந்திரம்-திருமூலர்.
அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் “சிதம்பர ரகசியம்” அடுத்து நாம் படிக்க இருப்பது.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

சிதம்பர ரகசியம் Copyright © 2015 by கீதா சாம்பசிவம் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book