69

நந்திவர்ம பல்லவன் வழிபட்ட இடத்திலேயே அவனுக்குப் பின்னர் பல நூறு ஆண்டுகள் கழித்து அச்சுதராயன் பிரதிஷ்டை செய்தான் எனவும், அதன் பின்னரே 1597-ல் கொண்டம நாயக்கனால் விரிவு செய்யப் பட்டது என்பதையும் அண்ணாமலைப் பல்கலைக் கழக வரலாற்றுத் துறைப் பேராசிரியர் திரு C.S.ஸ்ரீநிவாசாச்சாரியார் என்பவர் எழுதி இருப்பதாயும் தெரிய வருகின்றது. இதற்கும் பின்னர் கி.பி.1643-ல் 3-ம் ஸ்ரீரங்கராயன், என்பவனால் பெருமாள் கோயிலை மேலும் விரிவு படுத்த எண்ணி, அவனாலேயே புண்டரீகவல்லித் தாயார் சந்நிதியும் அமைக்கப் பட்டது. அப்போது சில சிவ சந்நிதிகள் இடிக்கப் பட்டதாயும், அதனால் தீட்சிதர்களுக்கும், விஷ்ணு கோயிலின் பட்டாச்சாரியார்களுக்கும், ஏற்பட்ட பகைமை முற்றிப் போய், அது வெகு காலம் நீடிக்கக் கூடாது என இரு தரப்புமே ஒப்பந்தம் போட்டுக் கொண்டதாயும் தெரிய வருகின்றது. அதன்படி, இனி பெருமாள் கோயிலை விரிவு படுத்தும் பணியை வைணவர்கள் மேற்கொள்ள மாட்டார்கள் எனவும், பெருமாளுக்கு எனத் தனியாக பிரம்மோற்சவம் போன்ற விழாக்கள் தனித்துச் செய்யப் படமாட்டாது எனவும் இருதரப்பிலும் நடந்த பேச்சு, வார்த்தைகளில் உறுதி செய்யப் பட்டிருக்கின்றதாயும் சொல்லப் படுகின்றது.

ஆனாலும் இதற்கான ஆதாரம் என்று சொல்ல முடிவதோ கி.பி.1862-ல் வைணவர்களுக்கும், தீட்சிதர்களுக்கும் ஏற்பட்ட வழக்கின் ஆதாரமே கிடைக்கின்றது என்றும் நம்பப் படுகின்றது. இதற்கான நீதிமன்றத் தீர்ப்பும் கி.பி.1867-ல் கிடைத்துள்ளது எனவும் சொல்கின்றார்கள்.

டிஸ்கி: இந்தத் தகவல்கள் கலைமாமணி பேராசிரியர் திரு.க.வெள்ளைவாரணனார் எழுதிய “தில்லைப் பெருங்கோயில் வரலாறு” என்ற நூலில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்கள் அறிய இந்தப் புத்தகத்தைப் படிக்கவும். நன்றி.

மேற்கண்ட தகவல்கள், அதாவது நந்திவர்மபல்லவனால்தான் முதலில் பெருமாள் கோயில் கட்டப் பட்டது என்று எழுத ஆரம்பித்த
சிதம்பர ரகசியம் பதிவுகள் அனைத்தும் நண்பர் ஒருவர் கொடுத்த தகவல்களின் அடிப்படையிலேயே எழுதப் பட்டது. என்றாலும் இவை மிகுந்த விவாதத்துக்கு உள்ளானது. முதலில் சொன்ன விஷ்ணு தான் சிவனின் நாட்டியத்தைக் காண சிதம்பரம் வந்தார் என்ற என்னுடைய கூற்றையே நான் மறந்துவிட்டே எழுதியதாய்ப் பலரும் நினைக்க நேரிட்டது. திவாகர் சொன்னமாதிரி சிவன் கோயில்களில் விஷ்ணு கட்டாயமாய் இடம் பெறுவார் என்பதையும் நன்கு அறிவேன். புராணக் கதையையும் மறக்கவில்லை. மற்றும் நான் எழுதிய எதையும் மறக்கவில்லை, அதே சமயம் நான் சிதம்பரம் சென்றிருந்தபோது, கோயிலில் விஷ்ணு, சுற்றுப் பரிகார தேவதையாக இருந்தவர், தனி இடம் பெற்றது நந்திவர்மபல்லவனாலேயே என்று தீட்சிதர் உறுதி செய்ததையுமே எழுதி உள்ளேன். சிதம்பரம் கோயிலில் விஷ்ணு முதலிலேயே இல்லை எனச் சொல்லவில்லை. மற்றபடி இதன் மூலம் யார் மனமாவது புண்பட்டிருக்குமானால் என்னுடைய மன்னிப்பையும் கோருகின்றேன்.

பொதுவாகக் கோயில் வரலாறு என எழுதும்போது, சிதம்பரம் கோயிலுக்குக் கட்டுமானப் பணிகளில் உதவிகள் செய்த அரசர்கள் பற்றியும் இதற்கு முன்னர் எழுதினேன். அந்தமாதிரியே இப்போது விஷ்ணுகோயிலின் திருப்பணிகள் செய்த அரசர்களைப் பட்டியலிட வேண்டி அம்மாதிரிச் செய்தேன். என்னைப் பொறுத்தவரை எனக்கு இதில் எந்தவிதமான வித்தியாசமோ, அல்லது தவறாகவோ தெரியவில்லை. அம்மாதிரி நான் எழுதியதாய் ஒரு கருத்து யாருக்கானும் இருந்தால், அது அவர்கள் சொந்தக் கருத்து. என்னை எவ்விதத்திலும் பாதிக்காது. எனக்குக் கிடைத்த தகவல்களை உங்கள் முன் வைக்கிறேன். அவ்வளவே! இன்னும் சில தகவல்கள் கிடைத்ததும் இதை முடித்துவிடுவேன்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

சிதம்பர ரகசியம் Copyright © 2015 by கீதா சாம்பசிவம் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book