67

//குழப்பத்தைப் பற்றி எழுதியுள்ளீர்கள். உங்கள் முதல் பாரா சரியானதுதான். நீங்களும் குழம்பி எங்களையும் குழப்பி விட்டுள்ளீர்கள்.//

குழப்பம் எல்லாம் எதுவும் இல்லை. அப்படியே சரியாத் தேதியைச் சொல்லணும்னு ஒவ்வொருத்தரும் கேட்டால் குழப்பம் எனக்குத் தான் வரும், வருது, வந்தது. சரித்திர ஆசிரியர்கள் கூட அனுமானமாகவே சொல்லி இருக்கின்றனர். அதை யாரும் எதுவும் சொல்லுவதில்லை, இல்லையா??

//கீதா! முதலில் ஆழ்வார்கள் கால அளவையெல்லாம் கணக்கில் எடுக்கப் பார்க்காதீர்கள். திருமங்கை மன்னனும் சரி.. குலசேகர ஆழ்வாரும் சரி.. சம காலத்தவர் என்று நீங்கள் எழுதியதற்கு என்ன ஆதாரம்? //

அப்பரும், ஞானசம்மந்தரும் மாதிரி இருவரும் ஒரே காலம் என்று சொல்லிக் கேள்வி தான் ஆதாரம் ஒவ்வொருத்தருடையதும் ஒவ்வொரு மாதிரி இருக்கு! ஆகவே சொல்ல முடியவில்லை.

//கோவிந்தராஜப் பெருமாள் ஏன் எப்படி வந்தார் என்பதெல்லாம் இனி ஆராய்வது முழுக்க முழுக்க வேஸ்ட். சிவ கதைகளைப் பற்றி எழுதிவருகிறீர்கள். ஒவ்வொரு சிவன் கோவிலிலும் விஷ்ணு ஆராதனைக்கும் இடம் உண்டு என்பது உங்களுக்கு தெரிந்ததுதானே. சிவன் சன்னிதியின் பின்புறம் நிச்சயம் பெருமாள் இருந்தாக வேண்டும். எல்லா சிவன் கோயிலிலுமே விஷ்ணு இருந்தாகவேண்டும். ஏனெனில் சக்தியைப் போலவே சிவனின் மறுபாதி விஷ்ணுவும் கூட. அப்படிப் பார்க்கையில் விஷ்ணுவும் சக்தியும் ஒன்றுதான் என்ற பொது எண்ணம் கூட தோன்றலாம். ஏன்.. அப்படித்தான் அப்பர் பார்க்கிறார். நம்மாழ்வார் பார்க்கிறார். அவர்கள் பார்ப்பதைத்தான் நாமும் பார்க்கக் கற்றுக் கொள்ளவேண்டும். சிதம்பரத்திலும் விஷ்ணு வழிபாடு உண்டு. அதுவும் சிவ-விஷ்ணு வழிபாட்டில் சிறந்த பல்லவர் காலத்தில் இவை அதிகமாக போற்றப்பட்டுள்ளது. சிவனுக்குக் கோயில் எழுப்பித்த பல்லவமன்னர்களின் பெயர்கள் எல்லாமே திருமாலின் பெயர்கள்தான்.//

நான் இதை ஆராயவே இல்லை. எனினும் நண்பர் ஒருத்தரின் கேள்விக்குப் பதில் சொல்ல ஆரம்பித்துக் கடைசியில் இங்கே வந்திருக்கின்றது.

//சிவன் சன்னிதியின் பின்புறம் நிச்சயம் பெருமாள் இருந்தாக வேண்டும். எல்லா சிவன் கோயிலிலுமே விஷ்ணு இருந்தாகவேண்டும். ஏனெனில் சக்தியைப் போலவே சிவனின் மறுபாதி விஷ்ணுவும் கூட. அப்படிப் பார்க்கையிஉல் விஷ்ணுவும் சக்தியும் ஒன்றுதான் என்ற பொது எண்ணம் கூட தோன்றலாம். ஏன்.. அப்படித்தான் அப்பர் பார்க்கிறார். நம்மாழ்வார் பார்க்கிறார். அவர்கள் பார்ப்பதைத்தான் நாமும் பார்க்கக் கற்றுக் கொள்ளவேண்டும்//

நான் எப்போவுமே அப்படித் தான் பார்க்கிறேன். அம்பிகையையும், விஷ்ணுவையும் ஒன்று எனச் சொல்லும்படியான பதிவும் போட்டிருக்கிறேன். என்றாலும் சில சமயம் என்னைக் குறித்து அப்படி ஒரு நினைப்பு வந்து விடுகின்றது. ஆனாலும் இதுவும் கடந்து போகும் என நினைக்க வேண்டும். அதை மறந்துவிட்டேனோ??? சில சமயம் சில தடுமாற்றங்கள் ஏற்படும். அப்படி ஒரு நேரம் இது! என்றாலும் இதிலிருந்தும் ஒரு பாடம் கற்றுக் கொள்கின்றேன்.

//மாணிக்கவாசகரின் காலகட்டத்தில் அவர் எழுதிய மணி மணியான பாடல்கள் திருச்சாழல். இந்தப் பாடல்கள் எதற்காக பாடப்பட்டது என்பதை நீங்கள் அறிவீர்கள். இலங்கை புத்த மதத்துப் பெரியவர்களுக்கும், மணிவாசகருக்கும் இடையில் எழுந்த வாக்குவாதத்தில் அந்த இலங்கை மன்னனின் ஊமை மகள் மூலமாகப் பாடச்செய்த அற்புதப் பாடல்கள் அவை. இலங்கை புத்தவம்ச சரித்திரத்தில் இப்படிப்பட்ட நிகழ்ச்சி நடைபெற்ற காலமாக மூன்றாம் நூற்றாண்டு காலகட்டத்தை சொல்கிறார்கள். அவர்கள் சொல்லிவிட்டார்களே என்று அதை அப்படியே எடுத்துக் கொள்ளவேண்டும் என்று சொல்ல வில்லை. உலகத்துக்கு ஞானத்தை விட்டுச் சென்ற பெரியவர்கள் ஏன் அவர்கள் காலகட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்றால் அதற்கும் காரணம் உண்டு. நமக்குத் தேவை சாரம்தான்.. அது எங்கிருந்து எப்போது வந்தது என்ற ரிஷிமூலம் தேவை இல்லை.//

தெரியும், கேள்விப் பட்டிருக்கேன். மாணிக்கவாசகர் காலமும் நிச்சயம் இல்லை எது என்று. அதிலேயும் குழப்பம் தான் மிகுதி.

//இரண்டாம் குலோத்துங்கன் ஏதோ வைணவ எதிரி என்பது போல சித்தரிக்கிறார்கள். இதுவும் தவறு. இவன் திருமாலைப் போன்றவன் என்று அவன் மெய்க்கீர்த்திகள் பாடுகின்றன. விஷ்ணு திருத்தலங்களுக்கு இவன் சேவைகளும் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளன.//

இது தான் நான் சொல்ல வந்ததும், கல்வெட்டுக்கள் மட்டுமின்றி பாடல்களும் இருக்கின்றன என்பதே என் கருத்தும். ஆனால் இதை இப்போது நிரூபிக்க வேண்டிய கட்டாயம் அந்த “தசாவதாரம்” படத்தால் வந்திருக்கு! எல்லாம் நேரம்!

//பொதுவாக இந்த சைவ-வைணவ நிகழ்ச்சிகளைப் பற்றிய குறிப்புகளைப் பார்க்கையில் 1915 ஆம் வருடத்தில் ஆரம்பித்து 1950 வரை கிடைத்த சரித்திர செய்திகளின் ஆதாரங்களின் மீதே அனைவர் பார்வையும் இருக்கிறது என்பது வருந்தத்தக்கது. தற்சமயம் நமக்கு ஏகப்பட்ட புதிய புதிய செய்திகள் கிடைத்துள்ளன. அவ்வப்போது இவை ஆராய்ச்சிக் கட்டுரைகளாக வந்து கொண்டே இருக்கிறது. டாக்டர் நாகசாமி, குடந்தை பாலசுப்பிரமணியம், மற்றும் டாக்டர் கலைக் கோவன், டாக்டர் நளினி இன்னும் எத்தனையோ ஆராய்ச்சியாளர்கள் சோழராஜாக்களைப் பற்றி புதிய புதிய செய்திகளை சொல்லிவருகிறார்கள். எஸ். பாலசுப்பிரமணியன் ஒரு இரண்டாயிரம் பக்கங்களுக்கு சிதம்பரம் கோயிலைப் பற்றி ஆராய்ந்து எழுதி இருக்கிறார்.//

மு.ராகவையங்காரின் குறிப்புகளும் எடுத்துக் கொண்டிருக்கின்றேன். பாலசுப்பிரமணியனின் புத்தகம் பற்றித் தெரியவில்லை. குடவாயில்?? குடந்தை??? பாலசுப்ரமணியம் எழுதி உள்ளதும் கேள்விப் பட்டுள்ளேன்.

//கீதா அவர்களே.. உங்கள் சிதம்பரம் பற்றிய கட்டுரைகள் நன்றாக எழுதப்பட்டு வருகின்றன என்பதை நான் ஏற்கனவே எழுதியுள்ளேன். ஆனால் தீட்சதர்கள் சொல்வதின் பேரிலேயே உங்கள் ஆதாரங்கள் இருந்திருக்கின்றன என்பதால் இவைகளை மற்றவர்கள் எழுதிய ஆதாரங்களையும் நீங்கள் ஒப்பிட்டுப் பார்த்து நடுநிலையில் எழுதுவது நல்லது என்று எனக்குப் பட்டதால் எழுதுகிறேன். மற்றபடி ஒரு நல்ல எழுத்தாளரை மனம் புண்படுத்த அல்ல.//

தீட்சிதர்களையும் நான் கலந்து கொள்வதால் ஆதாரங்கள் அனைத்துமே அதன் பேரிலே என்று சொல்கின்றீர்கள். தீட்சிதர்களும் நன்கு படித்து ஆராய்ந்தே எழுதி இருக்கின்றனர். தவிர, கோயிலோடு அவர்களுக்குத் தானே இன்றுவரையில் நடைமுறைப் பழக்கம் அதிகம் இருக்கின்றது. மற்ற ஆதாரங்களையும் ஒப்பிட்டுப்பார்க்கவேண்டிய இடங்களைக் குறிப்பிட்டுச் சொல்லும்படிக் கேட்டுக் கொள்கின்றேன். இதனால் எல்லாம் மனம் புண்படாது. அப்படிப் புண்படும் அளவுக்கு மனது பலகீனம் இல்லை. எழுதுவதே மற்றவர்கள் கருத்தையும் எதிர்பார்த்தே என்னும்போது, அனைத்துக் கருத்துக்களையும் ஏற்றுக் கொள்ளத் தானே வேண்டும்.

//நன்றி..

திவாகர் //

நன்றி நான் சொல்லணும். நன்றி.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

சிதம்பர ரகசியம் Copyright © 2015 by கீதா சாம்பசிவம் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book